கும்பகோணம்: கர்நாடக அரசு மேகதாதுவில் புதியததாக அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்ககூடாது என்பதை வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு முயற்சிக்கும் கர்நாடக அரசின் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்க கூடாது என்று விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மேகதாதுவில் புதியதாக அணைகள் கட்டினால் காவிரி டெல்டா பாசன பகுதிகள் முற்றிலும் பாலைவனமாக மாறும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்த கர்நாடக அரசை கண்டித்து திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு விவசாயி சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவிரிநீர் மேலாண்மை வாரிய தலைவரின் அத்துமீறல்களை கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்கள். தமிழ்நாட்டுக்கு வரும் காவிரிநீரை தடுக்க முயற்சிப்பதாக கர்நாடக அரசை கண்டித்தும் அதற்கு துணை போகும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் தஞ்சை ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மேகதாது அணை கட்டும் முயற்சிகளை காவிரி டெல்டா விவசாயிகள் ஒன்றிணைந்து முறியடிப்போம் என்று அந்த ஆர்ப்பாட்டத்தில் கூறப்பட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசை கண்டித்தும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.